Saturday, April 27, 2013

வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா? வளர்க்கிறீர்களா..?

நம்மை நாமே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளில் இதுவும் ஒன்று. ஒரே தொழிலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும்போது வாழ்க்கை பரபரப்பாகத்தான் இருக்கும். ஒரு தொழிலில் தொடர்ந்து செயல்படுவது என்பதற்கும், ஒரே விதமாக செயல்படுவது என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உதாரணமாக ஒரு ஜவுளிக்கடையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஜவுளிக்கடை ஒரு கிளையுடன் இயங்குகிறபோது அந்தக் கிளையிலேயே புதிய புதிய பிரிவுகள் கொண்டு வருவது, நவீன ரகங்களை அறிமுகப்படுத்துவது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.

அதே நிறுவனம், புதிய புதிய கிளைகளைத் தொடங்கி இன்னும் பல பகுதிகளில் செயல்படுகிறபோது வளர்வதாக அர்த்தம்.

இது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. தனிமனிதர்களுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனத்தை நடத்துபவர் தன்னுடைய சக்தி முழுவதையும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உரியதாக்கி நிறுவனத்தை வளர்ப்பது ஒரு வகை.

பொதுப்பணி, உபதொழில், கொஞ்சம் நிலம் வாங்கி தோட்டக்கலை வளர்ப்பில் ஈடுபடுவது, பங்குச்சந்தை என்று அவரவர் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ப விரிவாக்கம் செய்து கொண்டே போனால் வளர்வதாக அர்த்தம்.

பொதுவாக, புதிதாய் எதையும் முயன்று பார்ப்பதில் தயக்கம் உள்ளவர்களும், தங்களுக்கு வசதியான வாழ்க்கையை சிரமங்களோடு வாழ்ந்தால்கூடப் போதுமென்று நினைப்பவர்களும் வட்டங்களுக்குள்ளேயே வாழ்வார்கள்.

வட்டத்தில் சுழல்வதற்கும் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு வாகனத்தின் சக்கரத்திற்கும் வாகனத்தில் செல்பவருக்கும் உள்ள வேறுபாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வழவழப்பான சாலையாக இருந்தாலும் சரி, குண்டுங்குழியுமான பாதையாக இருந்தாலும் சரி, வாகனத்தில் செல்பவரோ புதிய புதிய இடங்களைப் பார்க்கிறார். போகும் இடங்களில் எத்தனையோ வேலைகளைச் செய்கிறார்!

சக்கரம் சுழல்வதால்தான் அவர் செல்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால் வாகனத்தில் பயணம் செய்பவர் பெறும் பயன்களையெல்லாம் வண்டியின் சக்கரம் பெறுவதில்லை. ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பவர்கள் வளர்ச்சிகள் எதையும் காண்பதில்லை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வட்டத்தில் சுழல்பவராக மட்டும் இல்லாமல் வளர்ச்சியும் காண்கிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ள, இதோ சில வழிகள்.

நீங்கள் அன்றாடம் செய்கிற வேலைகளில், முதலிடம் தருகிற வேலைகள் என்னென்ன என்பதைப் பாருங்கள். அவை கீழ்க்கண்ட அம்சங்களுக்குள் அடங்குகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்:

1. நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு வருமானம் தருகிறதா?

2. செய்தே தீரவேண்டிய அளவுக்கு முக்கியமானதாய் அமைகிறதா?

3. நீங்கள் கொண்டிருக்கும் இலட்சியங்களுக்கும் வகுத்திருக்கும் இலக்குகளுக்கும் தொடர்புள்ளதாய் இருக்கிறதா?

4. மற்றவர்களுக்கு பிரித்துத்தர முடியாமல் நீங்கள்தான் செய்யவேண்டும் என்ற அளவுக்கு உங்கள் கவனத்துக்குரியதாய் இருக்கிறதா?

இந்தக்கேள்விகளுக்கு பதில் கண்ட பிறகே ஒவ்வொரு வேலையையும் தேர்வு செய்யவேண்டும். அதாவது, ஒரு வாரம் முழுவதும் நீங்கள் செய்து முடிக்கவேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டு அவற்றை இந்தக் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த நான்கு கேள்விகளில் ஒன்றில்கூட உள்ளடங்காத வேலைகள், உங்கள் வளர்ச்சிக்குத் துணை செய்யாதவை என்று தனியாகப் பிரித்துவிட வேண்டும்.

அவற்றை, நிறைய ஓய்வு நேரம் இருக்கையில் செய்வதா, அல்லது மற்றவர்களை செய்யச் சொல்வதா, தேவையில்லாத பட்சத்தில் செய்யாமலேயே விடுவதா என்றெல்லாம் யோசித்துத் தெளிவாக முடிவெடுங்கள்.

உங்கள் ஒவ்வொரு செயலிலும் உச்சகட்டமான பலன் பெறுங்கள்.

No comments:

Post a Comment