Saturday, April 27, 2013

கல்லிலே கலைவண்ணம் வெற்றியின் பன்முகங்கள்

நீங்கள் நினைத்ததை, முயற்சித்ததை, உழைத்ததை, நீங்கள் திட்டமிட்டதை, சரியான முறையில் எதிர்பார்த்த பலன் கிடைத்து, அதன்மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைத்தால் அது வெற்றி.


அதற்கிடையில் எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களது தொழிற்சாலையை மூடவேண்டும் என்று நோட்டீஸ் வரும். திடீரென்று சோதனையிட வருவார்கள். ஏதேனும் ஒரு புகாரைக் கொண்டுவந்து விசாரிக்க வேண்டுமென்பார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் ஒருவர் வெற்றி பெறுகிறார். வெற்றி என்பது ஓர் உணர்வு. திருப்தியான உணர்வு.

பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியல்ல. வெற்றி என்பது உங்கள் திட்டம் நன்றாக செயல்பட்டு, அதன் பலன் பலருக்கும் சென்று நாட்டுக்கும் பெருமை சேர்த்து ஒரு “பிராண்டை” உருவாக்கி இந்தப் பொருள் என்றைக்கும் தரமானதாக இருக்கும் என்கிற நிலையை, நம்பிக்கையை உருவாக்குவதே வெற்றி.

ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது துணிச்சலுடன் அதைப் பயன்படுத்துகிற மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும்.

நான் திட்டமிட்டு தொழிலில் இறங்கவில்லை. திட்டவிளக்கங்களோடு வங்கியை அணுகி கடன் பெற்றும் தொடங்கவில்லை. எந்த விற்பனை தரவுகளோடும் நான் தொழில் துவங்கவில்லை.

நீச்சல் பழகிக்கொள்ள கிணற்றில் தூக்கிப் போட்டது போல நான் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் தத்தளித்து, நீந்தி, உயிர் பிழைத்தேன். அதுதான் வெற்றி.

நீங்கள் ஏதேனும் சாதனை படைத்து அதுதான் வெற்றி என்று எண்ணாதீர்கள். கவனித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஓடிவிட்டதென்றால், இவன்தான் மாபெரும் ஹீரோ. அற்புதமான வெற்றி என்கிறார்கள். இரண்டு படம் தோல்வியென்றால் அவனைப்பற்றி பேச்சே வருவதில்லை. தேர்தலிலும் இந்த நிலைதான். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறினால் அது வெற்றி.

பெரிய பணக்காரர் ஒருவரிடம் “What is the power of Money” என்று கேட்டேன். செல்வமிருந்தால் என்ன செய்யும்?

செல்வத்தை வைத்துக்கொண்டு நீங்கள் கற்பனை செய்கிற அனைத்தையும் வாங்கமுடியும். அவ்வளவுதான். செல்வம் மட்டுமே உங்கள் பரம்பரை முழுமைக்கும் வெற்றியைத் தராது. உங்கள் முயற்சியும், கடுமையான உழைப்பும் கண்காணிப்பும்., மற்றவர்களை இணைத்து ஒரு தொழிலை நடத்தும் தன்மையும், உங்கள் வாடிக்கையாளர், உங்கள் விநியோகஸ்தர் என்று யாராக இருந்தாலும், அன்புடன், பண்புடன், அடக்கமுடன் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வரும்.

வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மோகன் குமாரமங்கலம் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் எப்படி சாதுர்யமாக வழக்கை நடத்துகிறார்கள் என்று கற்றுக்கொண்டேன்.

வழக்கறிஞர் தொழிலில் ஒரு நல்ல எதிர்காலம் காத்திருந்த வேளையில் அதைவிட்டுவிட்டு குடும்பச் சூழல் காரணமாக இந்தத் தொழிலுக்கு வந்தபோது இந்தத் தொழிலே தமிழ்நாட்டில் இல்லை.

ஊரில், “மகன் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு கல் உடைக்கிற வேலைக்கு போய் விட்டானாமே” என்று கேவலமாக பேசுகிறார்கள்.

உலக அதிசயங்களில் எதைப் பார்த்தாலும் அது கல்லோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும்.

ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று ஒரு விஞ்ஞானியிடம் பயிற்சி பெற்று இந்தியா திரும்பி, தொழில் துவங்கினேன்.

அப்போது எமர்ஜென்ஸி காலம், எங்கள் உறவினர் ஒருவர் அரசியலில் இருந்தார். அவருடைய வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என்று என் அலுவலகத்தை சோதனையிட்டார்கள். ஐரோப்பாவில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தையும் அவர்கள் எடுத்துப் போய்விட்டார்கள்.

இப்போது போல் எளிதாக தொழில் துவங்க முடியாது. வருமானவரி அலுவலகத்திற்குச் சென்று ஏற்றுமதியைப் பற்றியெல்லாம் சொன்னேன். அதற்குள் புதிய ஆட்சி வந்தது. வந்த ஆட்சி கல்குவாரிகளை அரசே நடத்தும் என்று என்னிடமிருந்து பறித்துக் கொண்டது.

நானும், என்னை நம்பி இந்தத் தொழில் செய்யலாம் என்று வந்த என்னுடைய சகோதரர்களும் கர்நாடகாவிற்குச் சென்று தொழில் துவங்கினோம். அங்கேயும் இதே நிலை. நல்ல நிலையில் எல்லாம் போய்க் கொண்டிருந்தபோது அரசே என் குவாரியைப் பறித்துக் கொண்டது. வழக்குகள் நடத்தி தொழிலை மீட்டேன்.

வெற்றிகரமான முடிவென்பது சில சமயம் எதுவும் செய்யாமலிருப்பதுதான். இல்லையென்று சொல்வதற்கு மாபெரும் துணிச்சல் வேண்டும். எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் சரி, இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று தீர்மானமான முடிவு எடுக்க வேண்டும்.
இந்தத் தொழிலால் எனக்கு என்ன திருப்தியென்றால், ஜப்பானில் முப்பதாயிரம் கட்டிடங்கள் என்னுடைய கற்களால் கட்டப்பட்டவை.

வெற்றி என்று சொல்லும்போது தியாகம், துன்பம் என்பதும் இருக்கும். அதைத் தவிர்த்து வெற்றி மட்டுமே பார்க்காதீர்கள்.

சொத்து என்று பார்த்தால், முதல் சொத்து நீங்கள்தான். உங்கள் உடல்தான். நல்ல உடல் பலத்துடன், மனபலத்துடன் சாதனை புரியுமளவிற்கு பாடுபட்டால்தான் முடியும். அடிப்படையான அந்த சொத்தை விட்டுவிடாதீர்கள்.

ஒரு மனிதன் இறுதிவரை தன்னால் இயன்ற அளவிற்கு மனதாலோ, உடலாலோ உழைத்தால்தான் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

நான் இந்த தொழிலுக்கு வந்தபோது ஆண்டு முழுவதும் ஒருகோடி ரூபாய்க்குக்கூட ஏற்றுமதியில்லை. இந்தியா முழுவதும் 4000 கோடி ரூபாய் அளவிற்கு, இப்போது 20 மாநிலங்களில் ஏற்றுமதி செய்கிறார்கள்.

LCD, பிளாஸ்மா டிவி செய்வதற்குக்கூட இப்போது கற்களைப் பயன்படுத்துகிறார்கள். இது இந்தியாவின் வெற்றி.

No comments:

Post a Comment