Wednesday, March 25, 2015

ஒளிமயமான எதிர்காலம்…

ஒளிமயமான எதிர்காலம்…

சின்னஞ்சிறு விஷயத்திலும் தன் முழுக்கவனத்தைம் செலுத்துபவனே அதிமேதையாகிறான். தான் அதிமேதை என்பதற்காக சிறிய விஷயங்களையும் கவனிக்காது அலட்சியம் செய்பவன் தோல்வியை அடைகிறான். வாழ்வின் நுட்பமான இத்தகைய சில வழிமுறைகளைத் தெரிந்து செயல்படும்போது ஒளிமயமான வாழ்வைபெறலாம்.

உண்மை ஒரு கூரிய கத்தி முனையை போன்றது. அதை உபயோகிக்கத் தெரியாமல் உபயோகித்தால் நம் கையையே பதம் பார்த்து விடும். உண்மையையும் சில இடங்களில் மறைத்தே ஆக வேண்டுமாயின் அதற்காகத் தயங்கக் கூடாது. அதனால், யாருக்கும் தீமை நேராவிட்டால் அவ்வாறு மறைப்பதில் தவறேதுமில்லை.

அறிவு வேறு, உத்தி வேறு

அறிவுக்கு எதைச் செய்வது என்பது மட்டுமே தெரிம். உத்திக்கு அதனை எவ்விதம் செய்தால் வெற்றி பெற முடியும் என்பதும் தெரியும். அதனால் தான், அறிவாளிகள் சிந்தனை மட்டும் செய்கிறார்கள். உத்தியைக் கையாள்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.

அறிவானது நமக்கு சில விஷயங்களில் மட்டுமே நமது தேவையை பூர்த்தி செய்யும். ஆனால், உத்தியோ நமக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றியைத் தேடித் தரும். துன்பங்கள், தடங்கல்கள் என்று எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது உத்தியே. இரண்டுக்கும் இடையே வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்குமான வேறுபாடு உண்டு.

புதிய சிந்தனையுடன் செயலாற்றுங்கள்

நம் வாழ்வு வளமாக மாறுவதற்கு புதிதாக சிந்தித்த விஞ்ஞானிகள் தான் காரணம். இன்றைய நவீன வசதிகளான கப்பல்கள், விமானங்கள், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், நுல்நிலையங்கள், நகரங்கள், ரசாயனக் கண்டுபிடிப்புகள், கலைச்செல்வங்கள் என நாம் அனுபவிக்கும் அனைத்து வசதியான பொருட்களுக்கும் காரணம், அவர்களின் அன்றைய சிந்தனை நிறைந்த உழைப்பே.

இளமையை பயன்படுத்துங்கள்

மழைக்காலத்தில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலத்தில் வற்றி விடுகின்றன. அதுபோன்ற இடங்களில் உள்ளவர்கள் கோடைகாலத்தில் அணைக்கட்டுகள் முலம் தங்களுக்கு தேவையான நீரைத் தேக்கி வைக்கிறார்கள். இளமை என்னும் கிணறு எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் என்று எண்ணி, இளைஞர்கள் தங்கள் ஆற்றல்களை வீண்விரயம் செய்து விடக்கூடாது. அந்த கிணறு வறட்சியடைய ஆரம்பித்ததும் தான் அவர்களுக்கு தங்களது ஆற்றலின் மதிப்புத் தெரிய வரும். நம் உடல், முளை ஆகியவற்றின் ஆற்றல் என்ற ஆறானது முதுமைபருவத்தில் வற்ற ஆரம்பித்து விடுகிறது. ஆனால், இளமையில் அதைச் சீராக செலவிட்டு வருவோமாயின், கோடைக்காலத்திற்காக அணைக்கட்டுக்களில் நீரைத் தேக்கி பயன்படுத்துவது போல, முதுமையிலும் நாம் இளைஞர்கள் போன்று கம்பீர வலம் வரலாம்.

நல்ல புத்தகங்களே நல்ல நண்பன்

நண்பர்களின்றி தனித்து இருபவர்களுக்கு புத்தகமே நிஜமான நண்பன். உங்கள் ஆற்றலை தேவையான காரியங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில், வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பயனுள்ள பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்யுங்கள். நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை, சுருங்கச் சொல்லி விளங்க வையுங்கள்.

ஒருவனுக்கு எப்போது கடமை உணர்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதே அவனது வாழ்க்கை பாதையும் மென்மையாக மாறுகிறது. கடமையிலிருந்து அணுவளவேனும் அடிபிறழாது நின்று அவன் தன்னுடைய துன்பங்களையெல்லாம் விரட்டுகிறான். அவனது நல்ல எண்ணங்களால் மேலான உரிமைகள் எல்லாம் தாமாகவே அவனை வந்தடைகின்றன.

No comments:

Post a Comment