Wednesday, March 18, 2015

பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்

பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்:-

ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்க நடவடிக்கையை மேற்கொண்டு செயல்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும். அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயல்திறனும் மேம்படும்.

அதனால் ஒவ்வொரு மேலாளரும் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் .

1. ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியை அவ்வபோது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும். நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபோது அவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அதனால் வகுப்பறை பயிற்சியாகவோ, நேரடி பயிற்சியாகவோ , இணையத்தின் மூலமான பயிற்சியாகவோ அவ்வபோது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் (Innovation) செய்து கொள்வது நல்லது.

2.ஒரு மேலாளர் தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழில்நுட்ப அமைப்புகளில் உறுபினராக சேரும் படியான சூழலை ஏற்படுத்தி அதற்கு ஆண்டு சந்தாவை தம்முடைய நிறுவனமே செலுத்தும்போது அந்த தொழிலாளர்கள் மனநிறைஉற்று தம்முடைய தொழில்நுட்ப அமைப்புகளின் மூலம் தமக்கு கிடைக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும், , ஆலோசனைகளையும் தம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடும் நிலை ஏற்படும் அதன்மூலம் அந்நிறுவனத்தின் (Organization) வளர்ச்சி (Growth) உறுதியாக இருக்கும்.

3.பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணையச் செய்து கல்வி சுற்றுலா செல்லுமாறு செய்தல், விளையாட்டு போட்டி நடத்துதல், நாடகம், பாட்டு போட்டி, பேச்சுப் போட்டி நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை நிறுவனத்தில் செயல்படுத்த வேண்டும். மேலும் இந்த நிகழ்வுகளில் பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு செய்தல் மறைமுகமாக அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகும்.

4.பணியாளர்கள் அனைவருக்கும் அவரவர்கள் அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்டு செயல்படுமாறு அதற்கான சுழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தபின் அவர்களுள் அந்த இலக்கை அடைபவர்களுக்கு மட்டும் அவர்களின் செயலை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மற்ற பணியாளர்களுக்கு அவ்வாறு செயல்படுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டு அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் ( Productivity) மேம்படுத்துவதற்கான சுழல் ஏற்படுகின்றது.

5.நிறுவனத்திற்கு தேவையானதாக மாறிவரும் புதிய தொழில்நுட்பம் (Technology) , புதிய கண்டுபிடிப்புகள் (Invention) ஆகியவற்றை சார்ந்த புத்தாக்க வகுப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை பணியாளர்களுக்கு நடத்துவது, பணியாளர்களுள் சிறந்த புத்தாக்கம் நிறைந்த பணியாளர்களை இந்த வகுப்புகளில் தம்முடைய கருத்துகளை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறான வாய்ப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் திறனை மேம்படுத்த முடியும்.

No comments:

Post a Comment