Wednesday, February 27, 2013

கணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..


கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே.

கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே..

 1.       எழும்போதே ஒருவருக்கொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.

2.       வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம்.

3.       மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளுங்கள.

4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.

5.       எப்போதும் செய்தித்தாள் அல்லது டிவி பார்த்துக்கொண்டே இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச முயலுங்கள்.

6.       சமையல் முதல் அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவ முற்படுங்கள்.

7.       சாப்பிடும் தருணங்களில் டிவி பார்க்காமல் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.

8.       தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

9.       எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள்.

10.    இருவருக்கும் பிடித்த, பொதுவான பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கேளுங்கள். அது யதார்த்த சூழலில் கேட்கப்படும்போது மனதுக்குள் புன்னகை உண்டாக்கும்.

11.    பின்கூட்டி அணையுங்கள். இது உடல் சார்ந்தது மட்டுமின்றி மனரீதியாகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

12.    நகைச்சுவையான தருணங்களில் ஒருவருக்கொருவர் விஷயத்தைப் பகிர்ந்து சிரியுங்கள்.

13.    I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள்.

14.    ஒருவரின் தேவைகள் என்னவேன்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.

15.    வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் அசட்டை செய்யாது கவனிக்க வேண்டும்.

16.    தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.

17.    ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையிலும் இருந்து பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

18.    வெளியிலிருப்பின், அழைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.

19.    தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.

20.    ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.

21.    எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது.

22.    நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளக் கூடாது.

23.    உறவினர்கள் இருப்பின், மறைமுகமான, காதல் ஜாடைகளில் பேசிக்கொள்ளுங்கள்.

24.    பிறந்த நாள், காதலர் தினம் போன்ற நாட்களை மறந்துவிடாமல் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.

25.    தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.

26.    கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.

27.    முத்தம் என்பது காமம் சார்ந்ததில்லை. அது காதலை வெளிப்படுத்தும் ஊடகமே.. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்.

28.    தான் என்ன செய்தால் மற்றொருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை அறியமுடியவில்லையெனில், “நான் என்ன செய்தால் உனக்கு சந்தோசமாக இருக்கும்“என வெளிப்படையாக அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

29.    எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள்.

30.    வீட்டில், குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.

31.    ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.

32.    வேண்டாவெறுப்பாக இருக்காமல், வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறையைக் காட்டுங்கள்.

33.    உங்கள் வாழ்வின் கடந்த கால அனுபவங்களை, அதாவது உங்கள் இருவருக்குள் நடந்த ஸ்வாரஸ்யமான காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்.

34.    மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்..

35.    சாதாரணமாக கை கோர்க்கும் பிடியில் கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

36.    ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக இசை, மழை, பௌர்ணமி நிலவு, கவிதைகள், புத்தகங்கள் போன்றவைகள்.

37.    தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.

38.    என்னதான் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலித்தாலும் அதை வெளிக்காட்டப் பழகுங்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் ப்ரயோஜனப்படாது.

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும்.

No comments:

Post a Comment