Friday, September 11, 2015

எதையும் சாதிக்க உன்னால் முடியும்

எதையும் சாதிக்க உன்னால் முடியும்
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். உண்பதும், உறங்குவதும் மட்டுமல்ல வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாக மாற்ற ஏற்பட்ட போராட்டமே வாழ்க்கை. எந்த ஒரு சூழ்நிலையிலும் முயற்சியின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், முயன்றுகொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்ற வெறி வேண்டும். அப்பொழுது தான் சலிப்பு, தோல்வி, குறைகள், வறுமை போன்ற தடைகள் நம்மை பாதிக்காது.

உன் வாழ்க்கையில் நீ ஒரு முடிவெடுத்தால் உன்னை திசைமாற்ற துடிக்கும் சில முட்கள் உன் பயணத்தில் உண்டு. அது எதுவாகவும் இருக்கலாம். உன் குடும்பத்தில் நிலை, பொருளாதாரம், நண்பர்கள் ஏன் உறவாகவும் இருக்கலாம். அதற்காக நீ மனம் சோர்ந்துவிடக் கூடாது. இடையூறுகளால் உன் பயணத்தின் வேகமும், வெறியும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் முதல் பொறுப்பு. மனதைச் சிதறவிடாமல் எவனுடைய பார்வை இலட்சியத்தின் மீது இருக்கிறதோ, அவன் வெற்றியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். எதை அடைய வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ, அதுவே நம் உள்ளத்தின் காட்சியாகிவிட வேண்டும். அதிலேயே மனம் பதிந்துவிட வேண்டும். சாதனை பெற வேண்டுமானால், சோதனை என்ற கடலைக் கடக்க வேண்டும். நீச்சல் தெரியவில்லை என்று முழித்தால் நீ வீழ்ந்துவிடுவாய்; மாறாக போராடும் துணிச்சல் உனக்கிருந்தால் நீ வென்றுவிடுவாய் ஒன்றை நினைத்தால் அதை சாதித்துவிட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மன தைரியத்தை இழந்துவிடக்கூடாது. எந்தவொரு வெற்றியும் சும்மா வந்துவிடுவதில்லை. எந்த ஒரு சாதனையும் காயங்கள் ஏற்படாமல் கனிந்து வருவதில்லை. சிராய்ப்புகள் உண்டாகாமல் மலையேற நினைப்பதும், சிரமப்படாமல் தேனெடுக்க விரும்புவதும் கோழைத்தனமான ஆசைகள். எறும்புகூட போராடித்தான் தம் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இளமையில் கொடிய வறுமையைச் சந்தித்த அன்றைய சிறுவனான அப்துல்கலாம் தான், பின்னர் கடலளவு விரிந்தும், இமயமாயும் உயர்ந்தும் நின்றார்.

“சோதனைகளைத் துணிச்சலுடன் சந்திக்கின்றவன் சாதனைகளைப் படைக்கின்றான்”. சூழ்நிலைச் சூறாவளியை எதிர்த்தியங்க முனையும் போதுதான் புதிய சக்தியையும், உத்வேகத்தையும் நாம் பெற முடியும். ஆசைகள் இருந்தால் மட்டும் போதாது. அவைகளை அடைவதற்கான உறுதிப்பாடு வேண்டும். அந்த உறுதிப்பாட்டுடன் போராடிப் பெறுவதற்கான துணிச்சல் வேண்டும். “இதற்கு மேல் எதுவும் முடியாது” என்று நினைத்துவிட்டால் வாழ்க்கை அவ்வளவு தான். வெற்றிதான் விருப்பமென்றால் எந்த சூழலிலும் கலங்காதிரு.

உடலில் நோயே வராவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் வராது. அதுபோல் உன் வாழ்க்கையில் சோதனையே வராவிட்டால், சாதனையும் மலராது. மனம் தளராதே உன் உழைப்பிற்கு பலன் கிடைக்கும். துன்பம் கண்ட நாட்களுக்கு நிகரான இன்பம் உன் வாழ்வில் வரும்.

No comments:

Post a Comment