Thursday, September 10, 2015

தூக்கம் கண்களை தழுவட்டுமே!

தூக்கம் கண்களை தழுவட்டுமே!

ஒவ்வொரு மனிதனும், தினசரி ஆறு முதல், எட்டு மணி நேரம் வரை, ஆழ்ந்து தூங்க வேண்டும். இப்படி, நன்கு தூங்கி எழுந்தால்தான் விழித்திருக்கும், 16 மணி நேரத்தில், மனமும், உடலும் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால், மன அழுத்தம், பணிப்பளு, பரபரப்பான வாழ்க்கை முறை என, மிகுந்த நெருக்கடிக்கு இடையே பொழுதை கழிப்பதால், தூக்கம் வராமல் தவிப்போர் ஏராளம். இப்படி, தூங்க முடியாமல் தவிப்போருக்காக, எளிய முறையிலான டிப்ஸ் இதோ: 

இரவு படுக்கைக்கு செல்லும் நேரத்தை, உறுதியாக தீர்மானியுங்கள். இரவு தூங்கும் அறை நிசப்தமாகவும், இருட்டாகவும் இருப்பது நல்லது. இருட்டு பிடிக்கவில்லை எனில், நீல நிற இரவு விளக்கை பயன்படுத்தவும். தூங்கும் அறை காற்றோட்டம் நிறைந்ததாக, இருக்க வேண்டும். பஞ்சு தலையணைகள், பஞ்சு மெத்தை, போர்வை ஆகியவை, சுகமான தூக்கத்தை வரவழைக்கும். தரையிலோ, கட்டிலிலோ படுத்தாலும், பஞ்சு மெத்தைகளை உபயோகிக்கலாம். 

தூங்குவதற்கு, அரை மணி நேரம் முன், பசும்பால் அருந்துவது நல்லது. இது, டிரைப்டோபன் அமிலத்தை, மூளைக்கு வழங்குவதால், உடனடியாக நரம்பு மண்டலம் அமைதியாகி, தூங்க வைக்கும். மாலையில் காபி, மது, புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை, நரம்பு மண்டலத்தை தூண்டி விடுவதால், இரவு தூங்க நெடுநேரம் ஆகிவிடும்.


மசாஜ், யோகாசனம் மற்றும் தியானம் போன்றவை, மனதையும், உடலையும் ஓய்வு நிலைக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கும். இரவு உணவை, தூங்கச் செல்வதற்கு, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பே, சாப்பிடுவது நல்லது. இது, சாப்பிட்டதை எளிதில் ஜீரணமாக்கும். 

நெஞ்செரிச்சல் ஏற்படாமல் இருக்க, இடக்கைப் பக்கமாகவே படுக்கவும். மல்லாந்தோ, வலது பக்கமோ படுத்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, தூக்கம் வராது. குப்புற படுப்பதை தவிர்க்கவும். தினமும் உடற்பயிற்சி, துரித நடைபயிற்சி, ஏரோபிக் உடற்பயிற்சி இவற்றில், ஏதேனும் ஒன்றை பின்பற்றவும். அருகில் உள்ள இடங்களுக்கு, துரித நடைபயிற்சியாக சென்று வருவது நல்லது. 

கனமான தலையணைகளை தவிர்க்கவும். உள்ளங்கால்களை நாமே அமுக்கிவிட்டுக் கொண்டாலும், நரம்பு மண்டலம் அமைதியாகி, உடனடியாகத் தூக்கம் வரும். படுத்ததும் கவலைகளை, நினைவுக்கு கொண்டு வராதீர்கள். பகலில், விரும்பினால் முப்பது நிமிடங்கள் வரை தூங்கலாம். இதனால் மதியத்துக்குப் பின் புத்துணர்வுடனும், மிகுந்த விழிப்புடனும், பணிகளைச் செய்யலாம். 

பல ஆண்டுகளாக, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மதியமும், இரவும், கெட்டித் தயிருடன் சிறிது உப்பு சேர்த்து, சாப்பிட்டு வந்தால் போதும். அப்புறம் கொர்ர்ர்…க்கு குறைவிருக்காது!

No comments:

Post a Comment