Friday, September 11, 2015

முடிவெடுங்கள்

முடிவெடுங்கள்

அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை! சரியான நேரத்தில், மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள்தான் வெற்றியாளர்களின் இரகசியம் எனச் சொல்லலாம். ஒரு மாணவன் தான் எந்தத் துறையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறானோ அந்தத் துறையில் கால் பதித்தால் அவனால் முத்திரை பதிக்க முடியும்.

அந்நிய தேசத்தில் பிறந்தாலும், சிறு வயதில் தான் எடுத்த முடிவு ஏழைகளுக்கு உதவுவது, இறைவனுக்கு உதவி செய்வது என்ற இரண்டு தீர்க்கமான முடிவுகளை சற்றும் கூட மாற்றிக் கொள்ளாமல் பாதை வகுத்துக் கொண்டதால்தான் இந்தியராகவே வாழ்ந்து புனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அன்னை தெரசா. கடவுள் என்கின்ற கலாச்சாரத்தை மனிதம், மனித நேயம் என்ற வெளி நாட்டினரின் கருத்தை மாற்றி சாதனை தேசம் இந்தியா என்று பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்த ஒரு நரேந்திரன்தான் சுவாமி விவேகானந்தர் என்ற தீர்க்க தரிசனத்தை பெற முடிந்தது.

மிகக் கடுமையான வறுமை நிலையிலும்கூட, பொதுவுடைமைக் கொள்கையிலிருந்து விடுபடுவதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவுதான் ‘மூலதனம்’ என்கின்ற அற்புதத்தை படைக்க முடிந்தது. தன்னுடைய உழைப்புதான் மூலதனம் என்று தெரிந்ததாலோ என்னவோ காரல் மார்க்ஸ் இன்னும் கூட நற்செய்திகளை நமக்குத் தந்து கொண்டிருக்கிறார். “உழைப்புதான், எல்லாச் செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலம்” – காரல் மார்க்ஸின் இந்த வரிகள் பல சிந்தனைகளின் முடிவு வாக்கியம் என்றும் கூடச் சொல்லலாம்!

உலகிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டவர்கள், கற்றுக் கொள்கின்றவர்கள் சராசரி மனிதர்கள். எந்த மனிதரிடமிருந்து உலகம் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றதோ அவர் சாதனை மனிதர். நம்முடைய எதிர்பார்ப்புகள் வேண்டுமானால் நமக்கு ஏமாற்றங்களைத் தரலாம். ஆனால் காத்திருப்புகள் எந்தக் காலத்திலும் கவலை தருவதில்லை. “காத்திருக்கப் போகிறேன்” என்ற முடிவும்கூட சரி என்று தான் சொல்ல வேண்டும். சரியான சமயத்திற்காகக் காத்திருந்த நாராயணமூர்த்திதான் இன்று கணினித் துறையில் புரட்சி செய்த இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

நம்மிடம் இருக்கின்ற சில வேண்டாதவற்றை விட்டுவிட்டால் போதும், வெற்றி நம்மைத் தேடி வரும். நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்கிற இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், தான் என்கின்ற ஆணவம் சேர்ந்த சுப்பீரியாரிடி காம்ப்ளக்ஸ் விட்டு விட்டாலே போதும். அசையா சொத்தாக ஒரு மல்ட்டி டிரேடிங் காம்ப்ளக்ஸ் கட்டிவிடலாம். பலருக்கு பிரச்னையே “நம்ம பாவம்” என்கின்ற ஒரு எண்ணம். நம் மீது நாம் கொள்கின்ற சுயபச்சாதாபம் விட்டொழிக்கின்ற நாளே நமக்குத் திருநாளாகும்.

தான் (சேர்ந்த) சார்ந்த தொழிலில் திறமையுடையவனாக இருப்பது என்பது வெற்றிக்கான அடிப்படைத் தகுதி ஆகும். எந்தச் செயலில் நம் திறமை வெளிப்படுகிறதோ அந்தச் செயல்தான் நமக்குத் தொழிலாக மாறிவிடுகிறது. ஒரு கோட்டைக்குத் தலைவனாக இருப்பதைக் காட்டிலும் சிறந்தது, செயல், தொழில் இரண்டிலும் திறமையாக இருப்பது. நம் உழைப்பும் நேர்மையும் வெற்றியைத் தருகின்றது என்று சொன்னால், அந்த வெற்றி நிலைத்திருப்பது நம்முடைய தீர்க்கமான முடிவுகள் எனலாம்.

21வது குழந்தையாக பிறந்தவர் வில்மா குடால்ப். 4 வயதில் போலியோ பாதிப்பு. கட்டை வைத்து நடந்த குழந்தை எடுத்த முடிவுதான் ஓட்டப் பந்தய வீராங்கனையாக மாறுவது என்று தாங்கு கட்டையை தூர எறிந்துவிட்டு ஓடப் பழகினாள். கால்கள் வேகங்கொண்ட பறவையாக மாறியது. தொடர்ந்து ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றாள். வென்றது அவளின் மனம்தான். சரியாக செல்கின்ற வாழ்வு, வெல்கின்ற வாழ்வாக மாற வேண்டும் என்றால், மிகுந்த உழைப்பு, மிகுந்த நேர்மை, சரியாக முடிவெடுக்கும் திறன் இந்த மூன்றும் 33.5% x 3 என்று இருக்குமேயானால், வெற்றியின் சதம் 100.5% ஆக இருக்கும்.

வெற்றி என்பது நமது வாடிக்கைகளாக இருந்தால் முயற்சிகளும் பயிற்சிகளும் நமக்கு வேடிக்கைகளாகவும், பழக்கங்களாகவும் மாறிவிடும்.

100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்.

No comments:

Post a Comment