Thursday, May 9, 2013

ஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு


ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர்.

என்ன வேலை செய்வது என்று முதலாவது சீடன் யோசித்தான். 

இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரசவை சென்று மன்னனை போற்றிப் பாடி நின்றான். 

அந்தத் துதிப் பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொணன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவையிலேயே வைத்துக் கொண்டான்.

இரண்டாவது சீடனிடம் நிறைய யோசனைகள் இருந்தன. 

ஆனால் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. 

அவன் தன் மனம்போன போக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். 

ஒருநாள் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான். 

அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

அவன் அதை வாங்கி உண்டபோது, அதுவரை கண்டறியாத ருசியை உணர்ந்தான். அந்த அறுசுவை உணவைத் தயாரித்து அளித்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான். 

தனக்குப் பின்னால் அந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லாமல் அவர் வாடுவது புரிந்தது. சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம் உதவியாளராகச் சேர்ந்து கொண்டான்.

அவனைப் பிடித்துப் போனதால் சமையல் கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவனும் வெகு விரைவிலேயே சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான்.

மூன்றாவது சீடனோ முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான். 

அப்போதுதான் அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளிலும் வரப்புகளிலும் கிடைத்த வேலைகளைச் செய்து பொழுதைக் கழிப்பதைக் கண்டான். 

தனக்கு அமைந்தது போல ஒரு குருவின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

ஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினான். 

ஆனால்,

தன்னுடைய வாழ்க்கைக்கே வழிதேட வேண்டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு.
குரு அடிக்கடி சொல்லும் உபதேசம் ஒன்று நினைவுக்கு வந்தது. 

எந்த ஒரு நல்ல காரியத்தையும் சிந்தித்தவுடன் செயல்படுத்தத் துவங்கிவிட வேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தானே தேடி வரும் என்பதுதான் அந்த உபதேசம்.

உடனடியாக, 

அந்தச் சீடன், அச் சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினான். 

சில சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்தடியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான். 

அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தனர்.

அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, படிப்படியாக வளர்ந்தான். சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, சிறந்த கல்வியாளனாகத் திகழ்ந்தான்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தன் சீடர்களைக் காண விரும்பினார் குரு. 

மூவரும் குருவைக் காண ஒருசேரக் கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும் மகிழ்ந்தார். தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர்.

ஆசிரமத்தில் தங்கி, குருவுக்குப் பணிவிடைகள் செய்தனர். அப்போது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார் குரு.

இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச் செய்தது.

ஒருநாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார்த்து, 

இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குரு புன்னகைத்தார்.

பின்னர்,

முதலாமவனைப் பார்த்துச் சொன்னார்.

“நீ அரசவைப் புலவன்! சிறந்த இலக்கியங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான்! நான் மறுக்கவில்லை!’என்றார்.

பின்னர், 

இரண்டாமவனைப் பார்த்து,

“நீ சிறந்த நளபாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்தவன் தாய்க்கு ஒப்பானவன்! அதனால் நீயும் உயர்ந்தவன்தான்! நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்ற குரு மேலும் தொடர்ந்தார்.

“ஆனால், 

அறியாமையில் இருக்கும் ஒருவனுக்குக் கல்வி அளிப்பது என்பது, பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது போல! 

கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும்! 

அதனால் எழுத்தறிவித்தவன் எல்லாவற்றிற்கும் மேலானவன்..

அதனால்தான் உங்கள் இருவரையும்விட -மூன்றாமவனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம்..இப்போது உங்களுக்கு புரிகிறாதா என்றார்..

நீதி : கல்வியே உலகில் மேலானது..

No comments:

Post a Comment