Thursday, May 9, 2013

வெற்றி மந்திரம்


வெற்றி மந்திரம்: உங்களைப் புறக்கணிப்பவர்களை

வெற்றியால் வெல்லுங்கள் 

ஆசை இல்லாத மனிதர்கள் உலகில் இல்லவே இல்லை. புத்தர்கூட “ஆசையை ஒழிக்க வேண்டும்” என்று ஆசைப்பட்டார். ஆசைப்படுவதே தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் ஆசையை வெளிப்படுத்தத் தயங்கியே, பலர் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். 

ஆம்Ð மிகச்சாதாரண ஒரு விஷயத்திலே உங்கள் மனஉறுதியை கணித்துவிட முடியும். “நான் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்லப்போகிறேன்” என்று கிளம்பிப் பாருங்கள். 

வீட்டில் இருப்பவர்கள் தொடங்கி, அறிந்த தெரிந்த அத்தனை பேரும் முதலில் கேலியாக சிரிப்பார்கள். “தினமும் காலையில் எட்டு மணி வரை தூங்கும் பழக்கம் இருக்கும் உங்களால் எப்படி நடைபயிற்சி செய்ய முடியும்” என்று சீண்டுவார்கள். 

அவர்களுக்காக ஒரு வாரம் நடைபயிற்சி செய்து காட்டினாலும், “இதெல்லாம் கொஞ்சநாள் வரைக்கும் தான், அதற்கப்புறம் கும்பகர்ணன் மாதிரி தூங்கத்தான் போறீங்க” என்று கிண்டல் செய்வார்கள். 

அதற்குப் பின்னரும் நீங்கள் நடந்து கொண்டிருந்தாலும் “நீங்க என்ன வேகமாவா நடக்கறீங்க, சும்மா ஜாலியா நடக்கறீங்க. இப்படி மெதுவா நடக்கறதெல்லாம் வேஸ்ட் தெரியுமா?” என்று விமர்சிப்பார்கள். 

ஒரு சாதாரண நடைபயிற்சிக்கே இத்தனை கிண்டல், கேலி என்றால் ஏதாவது புதுமையான முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கிளம்பினால் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தியுங்கள். 

“இவனெல்லாம் புதுசா பிசினஸ் செஞ்சா நாடு உருப்பட்ட மாதிரி தான். புதுசா செய்றதெல்லாம் ரிஸ்க், எப்பவும் போல பழைய பாணியிலேயே செய்” என்று ஆர்வத்துக்கு தடை போடத்தான் செய்வார்கள். 

இப்படிப்பட்ட கேலிகளுக்கும், விமர்சனங்களுக்கும் பயந்தே ஏராளமான நபர்கள் தன்னுடைய திறமைகளை ஒளித்து வைத்துவிடுவார்கள். 

“தம்மை விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை” என்ற உறுதியுடன், தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவர்கள் மட்டுமே வெற்றிக் கோட்டைத் தொட முடியும். 

இதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் தான் மைக்கேல் பெல்ப்ஸ். 

பெல்ப்ஸ்க்கு சின்ன வயதிலேயே ஏ.டி.எச்.டி. எனப்படும் அட்டன்ஷன் டிபிசிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர்” என்ற பிரச்சனை இருந்தது. இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எந்த இடத்திலும் கொஞ்சநேரம் கூட அமைதியாக இருக்க முடியாது. எந்தப் பாடத்திலும் முழுமையாக மனம் செல்லாது. 

ஆசிரியர் சொல்லித் தருவதை கவனிக்கப் பிடிக்காது அல்லது முடியாது. அதிக துடிதுடிப்புடன் ஏதாவது பிடித்த வேலையை மட்டும் தொடர்ந்து செய்வது, திடீரென கையில் இருக்கும் பொருட்களைத் தூக்கி எறிவது என்று ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கும். 

இந்தக் காரணங்களால் பெல்ப்ஸ், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் முதல் உடன் படிக்கும் மாணவர்கள் வரை அனைவரது கேலிக்கும் ஆளானான். அதுமட்டுமின்றி இவனுக்கு முன்னதாகப் பிறந்த சகோதரிகள் நல்ல புத்திசாலியாக இருந்ததால் அவர்களும் பெல்ப்ஸை ஒரு புழுவைப் போன்று பார்த்தார்கள். 

உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் அன்புக்குப் பதிலாக புறக்கணிப்பை மட்டுமே பெற்றவர் பெல்ப்ஸ். 

அதனால் பெல்ப்ஸை மட்டும் தனியே அக்கரை எடுத்து கவனிக்க முடிவெடுத்தார் அவரது தாயார். இதுவும் வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்கள். 

தனி மரமாக இருந்த அவரது அம்மா தெபோரா, உதவாக்கரை என்று சொல்லப்படும் மகனை உருப்படியான மனிதனாக்க முடிவெடுத்தார். அவனது விருப்பம் எதுவென அறிந்து நீச்சல் பயிற்சியில் இறக்கினார். முழு நேரமும் நீச்சலில் ஆர்வமாகவும், முழுக் கவனத்துடனும் செயல்பட்டார் பெல்ப்ஸ். 

“இந்த உலகமே உன்னை புறக்கணிக்கிறது பெல்ப்ஸ், நீ சாதனைகள் செய்து வெற்றி பெறுவதன் மூலமே அனைவரையும் வெல்ல வேண்டும்” என்பதை தன் மகனுக்கு மந்திரம் போன்று ஓதினார் தெபோரா. 

அவன் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கிய தொடக்கத்தில், “பாதி போட்டியிலேயே திரும்பி விடுவான், மந்தப்புத்திக்காரன்” என்று நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். 

ஆனால் எவரிடமும் பதில் பேசுவது அல்லது சண்டை போடுவது தன்னுடைய வேலை இல்லை என்பதை உணர்ந்திருந்தார் பெல்ப்ஸ். அதனால் தான் பேசுவதை விட, தன்னைப்பற்றி இந்த உலகமே பேசும் படி செய்ய வேண்டும் என்று முடிவுகட்டி முழுமையாக நீச்சலில் கவனம் செலுத்தினார். 

எந்த நேரமும் தண்ணீரிலேயே சாதனைக்காக தவம் கிடந்தார். அதற்குப் பலன் கிடைத்தது. சீனாவில் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் கோட்டியில் ஒட்டுமொத்தமாக 8 தங்க மெடல்கள் வாங்கி உலக சாதனை படைத்தார். 

அதுவரை ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் ஒருவர் 7 மடல் வாங்கியது தான் உலக சாதனையாக இருந்தது. அதனை முறியடித்தது மட்டுமின்றி, வெற்றி பெற்ற 8 போட்டிகளில் 7ல் உலக சாதனை படைத்து புதிய அத்தியாயம் படைத்தார் பெல்ப்ஸ். 

மந்தப்புத்திக்காரன், உதவாக்கரை, மூளை சரியில்லாதவன் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பெல்ப்ஸ் பெயரை உச்சரிக்காதவர்கள் இன்று எவரும் இல்லை. அவரது புகைப்படத்தை வெளியிடாத பத்திரிக்கைகள் இல்லை. 

மாபெரும் குறையினால் பாதிக்கப்பட்ட பெல்ப்ஸ், அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட பெல்ப்ஸ் உலக சாதனை புரிய முடியும் என்றால் நம்மால் முடியாதா? பிறர் புறக்கணிப்புக்கு என்று இடம் கொடுக்காதீர்கள். அவர்களது விமர்சனத்திற்கு பயந்து ஆர்வத்தை மூட்டைகட்டி வைக்காமல் போராடக் களத்தில் குதியுங்கள். வெற்றிகளைத் தட்டிப்பறியுங்கள்

No comments:

Post a Comment