Wednesday, May 29, 2013

நலம் தரும் நவக்கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு-கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது கிரகங்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. 

சூரியன்நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது. செவ்வாயும், ராகுவும் நமக்கு பலம் தருகின்றன. புதன் கிரகத்தால் வாக்கு மேன்மை பெற முடியும். வியாழன் நமக்கு ஞானத்தை அள்ளித் தருகிறது. ஒருவரது காம இச்சைகளையும், இந்திரியங்களையும் வெள்ளிக் கிரகம் இயக்குகிறது. 

துக்கம், நரம்புத் தசை மற்றும் மரணத்தை சனி தீர்மானிக்கிறது. ஒருவருக்கு, இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால், அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய் விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்கள்தான் நடக்கும். அதில் இருந்து தப்பி, நமது வாழ்க்கையை அமைதியாகவும், செழிப்பானதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அந்தந்த கிரகங்களை நாடிச் சென்று பரிகாரம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. 

சிவன் கோவில் களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும். எனவே ஒவ்வொரு கிரகமும் தனி சன்னதியில் இருந்து அருளாட்சி செய்யும் கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் உரிய பலன்களுடன் கூடுதல் பலன்கள் உடனே கிடைக்கும். 

தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன. தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டத்தில் திருமங் கலக்குடி அருகே சூரிய பகவானுக்கு சூரியனார் கோவில் உள்ளது. திருவையாறு தாலுகா திங்களூரில் சந்திரகிரகத்துக்கு தனிக்கோவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் தனி கோவில் உள்ளது. 

புதனுக்கு திருவென் காட்டிலும், வியாழன் (குரு) கிரகத்துக்கு ஆலங்குடியிலும், சுக்கிரனுக்கு (வெள்ளி) கஞ்சனூரிலும் சனி கிரகத்துக்கு திருநள்ளாறிலும், ராகுவுக்கு திருநாகேசுவரத்திலும், கேது பகவானுக்கு கீழப் பெரும் பள்ளத்திலும் கோவில்கள் அமைந்துள்ளன. உங்களுக்கு எந்த கிரகதோஷம் உள்ளதோ, அதற்கு உரிய கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து கொண்டால் வாழ்க்கையில் பிரச்சினைகளை குறைக்கலாம்

No comments:

Post a Comment