Wednesday, May 29, 2013

சிவனை பிடித்த சனி

சனி பகவானை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் பிடியில் சிக்கி தவிக்காதவர்களும் இருக்க முடியாது. பொதுவாக ஒருவருக்கு எந்த துன்பம் வந்தாலும் சரி, அவர்கள் முதலில் வசைபாடுவது சனியைத்தான். சிவன், விஷ்ணு, முருகர், விநாயகர், அம்மன் போன்ற தெய்வங்களுக்கு ஒப்பாக சனி பகவானையும் பக்தர்கள் தரிசனம் செய்தும் அவர் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் துன்பங்களை தருவது தவிர்க்க முடியாதது. 

அதற்கு காரணமும் இருக்கிறது. மேலும் மனிதர்கள் மட்டு மின்றி தெய்வங்களையும் பிடித்த சனி, ஒரு கட்டத்தில் சனி பகவானுக்கு அந்த ஆற்றலை அளித்த சிவபெருமானையே பிடித்தார். அது என்ன கதை பார்க்கலாம் வாருங்கள். 

தீவிர சிவ பக்தர்......... 

சனி ஒரு தீவிர சிவ பக்தர். நேர்மையானவர், திறன் மிக்கவர், அழுத்தமானவர் அதே நேரம் ஆற்றல் வாய்ந்தவர். அவர் சிவனை நோக்கி பல காலங்கள் தவமிருந்தார். சனியின் தவத்தை உணர்ந்த சிவபெருமானோ, அவருக்கு காட்சி அளிக்காமல், சோதிக்கும் பொருட்டு காலம் தாழ்த்தி வந்தார். 

ஆனால் சனியோ விட்டபாடில்லை. தனது தவத்தை பல யுகங்களாக தொடர்ந்தார். இந்த தவத்தின் வாயிலாக சிவபெருமானின் மாபெரும் சக்தி, உலகையாளும் நிலைகள் பற்றி சனியால் உணர முடிந்தது. அது சிவபெருமானை காணும் வகையில், சனியை மேலும் உந்தியது. சனியின் தொடர் தவம் சிவனை மிகவும் கவர்ந்தது. அவரது உறுதியை கண்டு இறுதியில் சனியின் முன்பாக ஈசன் காட்சி கொடுத்தார். 

மேலும் வேண்டிய வரத்தை தரவும் முன்வந்தார். ஆனால் சனி, எனக்கு எந்த வரமும் வேண்டாம் தங்களின் காட்சி கிடைத்ததே என் பாக்கியம் என்று கூறினார். அதே சமயம், இந்த உலகத்தை இயக்கி வரும் தங்களது நிர்வாக பொறுப்பில் என்னால் ஆன உதவியை செய்யும் பாக்கியத்தை மட்டும் தாருங்கள் என்று கோரிக்கை ஒன்றை சிவபெருமானிடம் வைத்தார். 

சனிக்கு பொறுப்பு வழங்குதல் சிவபெருமானால், சனியை முற்றிலும் உணர முடிந்தது. தனக்கென்று எதுவும் கேளாமல் உலகை நிர்வகிக்கும் பணியில் பங்கு எடுத்து உதவ வேண்டும் என்ற தூய்மையான பக்தி நிலையை அவர் மெச்சினார். அதன் பிறகுதான் கிரக அந்தஸ்த்தை சனிக்கு தந்தார் சிவன். அண்ட சராசரத்திலும், பூமியின் நிர்வாகத்திலும் மிக முக்கிய பொறுப்பான பணியையும், அதற்காக தனி சக்தியையும் சனிக்கு, சிவபெருமான் வழங்கினார். 

அன்று முதல் சனிக்கிரகம் பூமியை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் ஒன்றானது. அது ஒருவர் தன் வாழ்வில் செய்த, அவரது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ற வகையில் பலாபலன்களை வழங்குவது. சனி பொறுப்பேற்ற சில காலங்களிலேயே தேவர்கள், மன்னர்கள், மக்கள் என அனைவரும் அவரை வசைபாட தொடங்கி விட்டனர். 

நான் நன்றாக நிம்மதியோடு வாழ்ந்து வந்தேன். இந்த பாவியால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டேன். இந்த 71/2 தோஷத்தால் என் சந்தோஷம் அனைத்தும் பறிபோய்விட்டது என சனியை பழித்தார்கள். உத்தியோகத்தில், வியாபாரத்தில், வாழ்க்கை துணையால், பிள்ளைகளால் இன்னும் பல வழிகளில் பிரச்சினை வந்தது இந்த சனியால்தான். அவனது 71/2 காலத்தாலேதான் என்று வசைபாடினார்கள். 

முனிவர்கள் சாபம்......... 

இவ்வளவு ஏன் முற்றும் துறந்த முனிவர்கள் கூட தனது எதிர்கால வாழ்க்கையை ஞான திருஷ்டியால் உணரும்போது, எதிர்வரும் கால பிரச்சினைகள் எல்லாம் சனியால்தான் வரப்போகிறது என்பதை உணர்ந்து அவருக்கு சாபம் கொடுத்தனர். என்னதான் சனி ஆற்றல் மிகுந்தவராக, அழுத்தம் மிக்கவராக இருந்தாலும் முனிவர்கள் இட்ட சாபத்தால் அவர் மிகவும் மனமுடைந்தார். 

மக்களின் பேச்சுகளும், முனிவர்களின் சாபங்களும், படையெடுத்து சனியுடன் போரிட்டால் என்ன என்ற மன்னர்களின் எண்ணங்களும் சனிக்கு, தனது பணியை கவனிப்பதில் மிகவும் இடையூறை ஏற்படுத்தின. ஆயிரம் இருந்தாலும் முனிவர்கள் சாபம் பலிக்கும் என்பது சனியை நிலை குலைய செய்தது. 

ஒருவர் (ஆத்மா) முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் அவருக்கு அதிஷ்டத்தை தருவதும், அதே வேளையில் அந்த ஆத்மா பாவங்களை செய்திருந்தால் அந்த அழுகுற்ற ஆத்மாவை துன்பம், கஷ்டம் இவைகள் வாயிலாக சுத்தப்படுத்தி நல்நிலைக்கு திருப்புவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை, எந்த பிசிறும் இல்லாது தான் செய்து வரும்போது அதற்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இப்படி சபிக்கின்றார்களே என எண்ணியபடி சனி மனம் நொந்தார். இதனால் அவரது பணி பின்னடைவை அடைந்தது. 

சிவனிடம் தஞ்சம்......... 

மன சோர்வால் கடமையில் இருந்து தவறி விடுவோமோ என்று பயந்த சனி பகவான், நேராக சிவனிடம் சென்று தனது கடமைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தார். மக்களும், மன்னர்களும் கூட பரவாயில்லை. முனிவர்கள் கூட என்னை சபிக்கிறார்கள். இதனால் என் பணி தடைபட்டு விடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று கூறினார். 

இதனை கேட்ட சிவபெருமான் சற்று அமைதியாக இருந்தார். பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் கூறலானார். இந்த வழியாக, இந்த காலத்தில், இத்தனை நாழிகை என்னை வந்து பிடி முன்ஜென்மம் எப்படி கணக்கிடப்பட்டு நமக்கு இந்த ஜென்ம வாழ்வு அளிக்கப்பட்டு உள்ளதோ, அதுபோல நமது இந்த ஜென்ம நடவடிக்கைகளும் மவுனமாக கணக்கிடப்படுகிறது என்பதும், அதன் நன்மை, தீமை நம்மை வந்து அடைந்தே தீரும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

சனியைப்போல் கெடுப்பவரும் இல்லை. சனியைப்போல் கொடுப்பவரும் இல்லை. எனவே நமது எப்பிறவியி லும் நன்மையே நடக்க, அனைவரும் பாவங்களை களைந்து, புண்ணிய பாதைக்கு திரும்புவதே உத்தமம். அப்படி செய்தால் சனீஸ்வரர் நமக்கு பகையாக தெரியமாட்டார். மாறாக, அனைத்து நலன்களையும் வாரி வழங்கும் ஈசனாகவே தென்படுவார். 

புண்ணியங்களைசேர்ப்போம் என்று சிவன் தெரிவித்தார். இதனை கேட்டதும் சனிக்கு ஒன்றும் புரியவில்லை. நம் வேலையில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண வந்தால், இவர் மேலும் ஒரு புதிய வேலையை தருகிறாரே!. நமது குரலுக்கு செவிசாய்த்து உபாயம் கூறவில்லையே!. நம் பணி தடை பெற்றால் உலகத்தின் நிர்வாகம் தடைபடுமே. அதனால் நாம் சிவனின் கோபத்திற்கு அல்லவா ஆளாக நேரிடும் என்று பலவாறாக மனம் குழம்பி இருப்பிடம் திருப்பினார். 

சிவனை பிடித்த சனி...... 

சிவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் காலம் வந்தது. சிவனின் ஆணைக்கு இணங்க அவர் கூறிய வழியாக அந்த குறிப்பிட்ட காலத்தில் சனி புறப்பட்டு சென்றார். அது என்ன வழி தெரியுமா?. தேவலோகத்தை கடந்து செல்லும் கைலாய வழி. அதா வது சனி தேவலோகத்தை நோக்கி வந்தார். இதை கண்ட தேவர்கள் அனைவரும், அய்யய்யோ! 

சனி அல்லவா நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இன்று நம் கூட்டத்தில் யாரோ ஒருவர் கதை முடிந்தது என்று பதறியபடி கிடைத்த மறைவிடங்களில் பதுங்க ஆரம்பித்தனர். சிலர் தேவலோகத்தை காலி செய்து பல வேடங்களில் பூலோ கம், பாதாள லோகம் சென்று ஓடி ஒளிந்து கொண்டனர். ஆனால் சனியோ தேவலோகத்தை கடந்து சென்று கொண்டிருந்தார். 

இதனால் தேவர்கள் அனைவரும் மன நிம்மதி அடைந்து, அப்பாடா! தப்பித்தோம்டா சாமி! என்று பெருமூச்சு விட்டனர். பின்னர், சரி சனி எங்குதான் செல்கிறார் என்று தேவர்களுக்கு எண்ணம் தோன்றியது. அதனை பார்க்கும் ஆவலில் சனியை அனைவரும் பின் தொடர்ந்தனர். அப்போது நேராக கயிலாயத்தை அடைந்தார் சனி. அங்கு அமர்ந்திருந்த சிவபெருமானை பிடிக்க முயன்றார். அதனை கண்டதும் சிவபெருமான் ஓட தொடங்கினார். 

சனி ஈஸ்வரர் ஆனார்......... 

இதை கண்ட தேவர்கள் அனைவரும் உடல் நடுங்கிப் போனார்கள். அனைவரது புருவமும் மேல் நோக்கி வில்லாக வளைந்தது. இங்கு என்ன நடக்கிறது. சிவன் ஓடு கிறார், சனி அவரை துரத்திக் கொண்டு செல்கிறார். சனியிடம் இருந்து சிவன் தப்பிக்க, விஷ்ணுவும் சனி பார்வை படாத இடம் காண்பித்து உதவி புரிகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சனி பகவான் சிவ பெருமானை பிடித்து விட்டார். 

தேவர்களுக்கு மூர்ச்சையே ஏற்பட்டு விடும் போல் ஆகி விட்டது. ஏற்கனவே சனியின் பலம் அனைவரும் அறிந்ததுதான். இப்போது சிவனையே பிடித்து விட்டார். இனி சனியிடம் வைத்துக் கொண்டால் அவ்வளவுதான் என்று சனியிடம் தேவர்கள் அனைவரும் சரணாகதி அடைந்தனர். 

மேலும் சிவபெருமானை, சனி பிடித்த செய்தி அனைத்து லோகத்திற்கும் சென்று சேர்ந்தது. அதே சமயம், உன் கடமை தவறாமல், என்னையே பிடித்தமையால் உன் பொறுப்பை பாராட்டி என் பெயரையே உனக்கு பட்டமாக தருகிறேன். இனி நீ எல்லோராலும் சனி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுவாய் என்று சனியை வாழ்த்தி மறைந்தார் சிவபெருமான். 

வழிபட தொடங்கினர் இந்த செய்தி அறிந்த முனிவர்கள், மன்னர்கள், மக்கள் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்தார்கள். உண்மையில் நாம் படும் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் சனியால் இல்லை. நமது முற்பிறவியில் நாம் நடந்து கொண்ட விதத்தினால்தான் என்ற உண்மை அறியப்பெற்றனர். 

அதுவரை சனியை பழித்தும், பாவி என்றும், தோஷம் என்றும் தூற்றி வந்தவர்கள், தங்கள் பாவங்களில் இருந்து விடுபடும் வழியை தேடி சனியை வணங்க தொடங்கினார்கள். சனிக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்க ஆரம்பித்தன. 

சிவனின் கட்டளையை நிறைவேற்றி தன் இருப்பிடம் திரும்பிய சனி பகவான், முனிவர்கள், மன்னர்கள், மக்கள் ஆகியோரின் மனமாற்றத்தை கண்டு வியந்தார். இந்த வழியாக, இந்த காலத்தில், இத்தனை நாழிகை என்னை பிடி என்று சிவன் கூறிய போது அதன் அர்த்தம் சனி பகவானுக்கு புரியவில்லை. 

ஆனால் தேவலோகம் வழியாக, தேவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி இருந்த காலகட்டத்தில் ஏன் இந்த திருவிளையாடல் சிவனால் நடத்தப்பட்டது என்பது பின்னர்தான் அவருக்கு விளங்கியது. அவர் மனம் பூரிப்பு கொண்டது. சிவபெருமானை மனமுருக வேண்டி நன்றி தெரிவித்தார்

No comments:

Post a Comment