Monday, October 7, 2013

பயத்திற்கு குட்பை

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு மன உறுதியுடன் செயல்பட வேண்டும். மன உறுதி பெறுவதற்கு எதிரியாக இருப்பது பயம். நாம் மன உறுதி பெறும்போது நம்மிடம் உள்ள பயம் நம்மை விட்டு பறந்தோடி விடுகிறது”. இவை அனைத்தும் நாம் அறிந்துள்ளவை.

மன உறுதி பெறுவதற்கு மனதில் உள்ள பயத்தை விரட்டிவிடுவதே சிறந்த வழி. “அது சரிதான். ஆனால், சொல்வது சுலபம், செய்வது கடினம்” என்று சொல்லும் குரல் கேட்கிறது. ஆகவே, பயத்தை எப்படி விரட்டிவிடுவதென சுருக்கமாகக் காண்போம்.

நமது ஆழ்மனதில் பயம் இடம்பெறும்போதே நமக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது. அது இரண்டு வகையாக இருக்கலாம். முதல்வகை, ஆழ் மனதில் வேரூன்றி பதிந்துள்ள நிரந்தர பயமாக இருக்கலாம். இரண்டாவது வகை, அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பயமாக இருக்கலாம். அது எந்த வகையாக இருந்தாலும் மனதிலிருந்து அகலும் வரையில் நம்மை தனது பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி செய்கிறது. அது தைரியத்தை, தன்னம்பிக்கையை, திறமையை இழக்க வைக்கிறது.

மனதில் பய உணர்வை வேரூன்றி பதிய வைக்கும் சூழ்நிலையில் வளர்வதும், வாழ்வதும் நிரந்தர பயம் ஏற்பட பிரதான காரணமாக இருக்கிறது. அது நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி, செயலிழக்க வைக்கும் அளவுக்கு இருந்தால், மனோதத்துவ, மருத்துவ உதவி பெறுவதே சிறந்த வழி.

மனதில் உள்ள பய உணர்வை விரட்டி விடுவதற்கு தைரிய உணர்வை நிரப்பிக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். இந்த முயற்சிக்கு இரண்டு வழிகள் உதவக்கூடும்.

1. எண்ணத்தை மாற்றிக் கொள்வது
2. சுற்றுப்புற சூழ்நிலையை மாற்றிக் கொள்வது
இந்த இரண்டு வழிமுறைகளும் கற்பனையால் ஏற்படும் தற்காலிக பயத்தை விரட்டிவிட உதவுகின்றன.

எண்ண மாற்றத்தை ஏற்படுத்துபவை

1. மனதில் பய உணர்வு தோன்றும்போது நமது கவனத்தை திசை திருப்பிக் கொள்வது.
2. பயத்திற்கு எதிர் உணர்வான தைரியத்தைப் பற்றிச் சிந்திப்பது.
3. தைரிய உணர்வை தூண்டிவிடும் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்ப்பது.
4. தைரியமளிக்கும் பாடல்களைக் கேட்பது.
5. வீரதீர செயல்களைப் புரிந்த மாவீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிப்பது.
6. அநியாயத்தை எதிர்த்து நியாயத்திற்காக போராடும் கதாபாத்திரமுள்ள திரைப்படங்களைப் பார்ப்பது.
7. நாம் நம்மைப் படைத்த இயற்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கென நமக்குள் இயற்கையான தைரிய சக்தி இருப்பதை நம்புவது.
8. இதை இடைவிடாமல் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், அது நமது ஆழ்மனதில் இடம்பெற ஆரம்பித்துவிடும்.
9. அங்கே குடியிருக்கும் பயம் படிப்படியாக வெளியேறிவிட ஆரம்பிக்கும்.
10. மனம் தெளிவடைந்துவிடும். தன்னம்பிக்கை பிறந்துவிடும்.

சூழ்நிலை மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள

1. வசிக்கும் இடம், தொழில் புரியும் இடம் பய உணர்வைத் தூண்டுவதாக இருந்தால், அந்த இடத்தை விட்டு மாறிச் சென்றுவிட முயற்சி செய்ய வேண்டும்.
2. நம்மைச் சுற்றி உள்ளவர்களில் பலர் எதிர்மறையாகப் பேசி நமக்கு பயத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். நாம் அவர்களுடன் பழகுவதை தவிர்த்துவிட வேண்டும்.
3. அதைப்போலவே, நேர்மறையாகப் பேசி நமக்கு ஊக்கமளிப்பவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களது பேச்சும் செயலும் ஆக்க பூர்வமானவையாக இருக்கும். அவை நமக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும். அது போன்றவர்களுடன் அதிகமாகப் பழக வேண்டும்.
4. இந்த முயற்சி நமது பய உணர்வை விரட்டிவிட பெரும் உதவி அளிக்கும்.
நம்மிடம் உள்ள பய உணர்வு நீங்கி தைரியம் பெறும் வரையில் எண்ணத்தையும் சுற்றுப்புற சூழ்நிலையையும் மாற்றிக்கொள்ளும் முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். பின்னர், உங்கள் தைரியத்தையும், திறமையையும், செயல்பாட்டையும் கண்டு நீங்களே வியப்படைவீர்கள்.

No comments:

Post a Comment