Tuesday, September 24, 2013

பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை கூறுங்கள்

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது, மூடன் அறிவாளியாகலாம் பைத்தியம் தெளிந்த சித்தமுடையவனாகலாம் ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டுக்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசன் மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. அல்பிரட் ஐன்ஸ்டைன் போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள் உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்.

16. சாட்டையை கையில் வைத்து சொடுக்கிக் கொள்ள வீடு ஒரு சார்க்கஸ் கூடமும் அல்ல, பிள்ளைகள் விலங்குகளும் அல்ல.

17. மென்மையாக சொல்லும்போது வார்த்தைகள் மலர்கள், கடுமையாக சொல்லும்போது அவை குறு வாட்கள்.

18. சராசரியாக ஒரு நாளைக்கு இருபது தடவையாவது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு எதிர் மறையாக புத்தி கூறுகிறோம். இப்படிப் பார்த்தால் ஒரு குழந்தைக்கு இருபது வயதாகும்போது 1.24.000 தடவைகள் செய்யாதே.. நீ செய்வது தவறு ! என்ற எதிர்மறை வார்த்தைகளை சந்திக்க நேரும், இது தவறான வாழ்வு என்பதை பெற்றோர் புரிய வேண்டும்.

19. இவ்வளவு எதிர் மறைகளுக்குள்ளால் நீச்சலடித்து ஒரு குழந்தை வெற்றி பெறுகிறதென்றால் அது இறைவன் தன்னுடைய பிள்ளைகள் மீது கொண்ட அன்பினால்தான்.. வாழ்க.

20. நீ உருப்படமாட்டாய்… நீ தண்டச்சோறு… போன்ற வார்த்தைகளை பேச வேண்டாம்.. இவை நஞ்சு வார்த்தைகள்.. பிள்ளைகளை தாக்கி அழிக்கும் விஷம்.

21. இவன் உருப்படமாட்டானோ வாழ்வில் தோற்றுவிடுவானோ என்று நினைத்தால் அப்படி நடக்கும் ஆகவே அப்படியான நினைவுகளை தவிருங்கள்.

22. பிள்ளைகளை உருப்படுத்த பின்வரும் வார்த்தைகளை சொல்லுங்கள் :
என் மகனே – மகளே நீ வாழ்க..!
நீ உடல் நலமிக்கவனாக இருக்கிறாய்..!
அறிவு நலம் மிக்கவனாக இருக்கிறாய்..!
மன நலம் மிக்கவனாக இருக்கிறாய்..!
வாழ்வில் வெற்றி பெறும் எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் கொண்டுள்ளாய்.
நல்ல குணங்களை கொண்டிருக்கிறாய்..!
நல்ல முயற்சி உடையவனாக இருக்கிறாய்..!
நன்கு உழைப்பவனாக இருக்கிறாய்..!
நல் வாழ்க்கைக்கான எல்லாம் உனக்குக் கிடைக்கிறது..!
உன் உள்ளும் புறமும் தெய்வீகம் நிறைந்திருக்கிறது..!
நல்ல சூழலைப் பெற்றவனாக இருக்கிறாய்..!
நீ அருளாற்றல் பெற்று நலத்துடனும் வளத்துடனும் வாழ்க ! என்று அனுதினமும் வாழ்த்துங்கள்.

23. மேற்கண்ட வாழ்த்துக்களை பிள்ளைகள் உறங்கும்போது அருகில் சென்று சத்தமில்லாமல் மனதிற்குள் சொன்னால் அவனது அல்லது அவளது ஆல்ஃபா மனோநிலை அதை ஏற்கும். ஆழ்மனம் தூண்டப்படும் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும், உடன்பாட்டு சூழல் தோன்றும்.

24. இதைச் சொல்லச் சொல்ல உங்கள் மனோநிலை மாறும், உங்கள் கண்ணோட்டம் மாறும், சூழல் மாறும், எண்ண அலைகள் குழந்தையை தாக்குவதற்குப் பதிலாக தழுவி அன்பு செய்யும். மனம் மாறும், வாழ்வு புதிதாக சேரும்.. வாழ்வு புதிதாக மலரும். வாழ்த்திப் பாருங்கள் வளத்தை சேருங்கள்.

25. குழந்தைகள் நமது நம்பிக்கைகள், ஒரு குழந்தையின் கௌரவத்தை உணருங்கள், ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள், ஏனெனில் உண்மையிலேயே நாம் அப்படி இல்லை – ராபட் ஹென்றி
நீங்கள், உங்கள் பிள்ளைகள், உங்கள் குடும்பம், உங்கள் சுற்றத்தவர் அனைவரும் நலமாக வளமாக வாழ வேண்டும் அதுவே நம் பேரின்பம்…! அதைவிட்டால் வேறேது இன்பம் !

No comments:

Post a Comment