Wednesday, September 4, 2013

தீபாராதனை

நம்முடைய உள்ளத்தைத் தீபக்கலமாகக் கொண்டு மனதை குரோதம், வஞ்சகம் முதலிய அழுக்குகள் இல்லாமல் ஒருமுகபடுத்த வேண்டும். அப்போது அது சித்தமெனும் திரியாகும்.அதை உள்ளத்தில் வைத்து அன்பு என்னும் நெய்யை நிறைய வார்த்து சித்தத்தில் மந்திரம் என்னும் நெருப்பை வைக்க வேண்டும்.மந்திரத்தை ஜெபம் செய்வதே விளக்கை ஏற்றுவதாகும் .அம்மந்திரத்தின் அர்த்த சிந்தனம் செய்வது விளக்கைத் தூண்டிவிடுவதாகும் .அப்படிச் செய்தால் திரியின் நுனியாகிய புத்தி ஞான சுடர்விட்டுப் பிரகாசிக்கும் .அப்போது ஆனந்த ரூபியாகிய கடவுள் தோன்றுவாள் அதாவது உள்ளத்தில் பிரம்மானந்த வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரண ஏக உருவாய்த் தோன்றும்,கடவுளுக்கு தீபாராதனை செய்வது இத்தத்துவத்தை விளக்குவதாகும்.


தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று. கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும். தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால், ஒரு திரை போடப்படுகின்றது. தீபத்தை காட்டும் பொழுது திரை விலக்கப்படுகிறது. இதன் தத்துவம் என்னவென்றால், நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து, நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.

தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது, முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும், இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும், மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும். பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன. 

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும். ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும். 

தீப ஆராதனை செய்யும் போது சிலையின் மின் கடத்தும் திறன் நிலைப்பட்டு இருக்கும் .

நெய்யில் தாமரை நூல் இட்டு ஒளி ஏற்றும்போது அந்த ஒளி கண்ணுக்கு மிகவும் நல்லது .விளக்கெண்ணெய் விளக்கை உபயோகிக்கும்போது கண்ணுக்கு குளிர்ச்சியும் ,நல்ல பார்வையும் உண்டாகிறது .அதனால் தான் பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கடைசி வரை கண்ணாடி அணியாமல் கூரிய பார்வையுடன் விளங்கினார்கள்.

No comments:

Post a Comment