Tuesday, October 1, 2013

மிகவும் அழகான உறவு

உலகிலே மிக அழகான உறவாக வர்ணிக்கப்படுவது அம்மா- மகளுக்கு இடையே நிலவும் அன்பான உறவுதான். மகள்கள், அம்மாக்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

அம்மாக்கள் போட்டுக்கொடுக்கும் வாழ்க்கை மேப்பை வழிகாட்டியாகக் கொண்டுதான் மகள்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த உறவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த சில வழிகள் இருக்கின்றன.

என் அம்மாவைப்போல் இந்த உலகத்தில் சிறந்த தோழி வேறு யாரும் இல்லை. எந்த கவலையையும் தீர்க்க என் அம்மாவின் மடி எனக்கு இருக்கிறது. எந்த மன பாரத்தையும் இறக்க என் அம்மாவின் தோள்கள் எனக்கு இருக்கின்றன என்று மகள் நினைக்கும் அளவுக்கான பந்தத்தை அவளது குழந்தைப் பருவத்திலே தொடங்கிவிடுங்கள்.

 5 வயதில் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் மகள் 15 வயதில் எதிரிபோல் சீறுவாள். பின்பு 25 வயதாகும்போது மீண்டும் அம்மாவின் மடிக்கே திரும்பிவருவாள். அதனால் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வார்த்தைகளில் மகளை வறுத்துவிடவேண்டாம். அதனால் குறைந்த நேரம் பேசுங்கள்.

ஆனால் அது அன்பு கலந்த, நிபந்தனைகளற்ற பேச்சாக இருக்கட்டும். பேசிக் கொண்டே இருக்கவேண்டியதில்லை. அருகில் அமருங்கள். ஒன்றாக டி.வி.பாருங்கள். சினிமாவுக்கு செல்லுங்கள். விளையாடுங்கள். நடிகை ஒருவரை சினிமாவில் பார்த்துவிட்டு, அதுபோல் தன் தாய் எப்போதும் அன்பை பொழிவாள் என்று மகள் எதிர்பார்க்கக்கூடாது.

அது போல் மகளை என்றும் கைக்குழந்தைபோல் நினைப்பதும், தான் கீ கொடுத்தால் ஓடும் பொம்மை என்றும் அம்மா நினைத்துவிடக் கூடாது. அம்மா தாயும் - மகளும் மனம் விட்டுப்பேச வேண்டும். இருவரும் இரு தலைமுறையை சேர்ந்த சுதந்திர மனிதர்கள் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும். அப்படி நினைத்தால் தான் பிணக்கு குறைந்து இணக்கம் ஏற்படும்.

No comments:

Post a Comment